கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

கால்நடை வளர்ப்பின் ஊடாக நாட்டில் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை நான் முற்றாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக கால்நடைகளை வெட்டி விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.  நுவரெலியா பிரதேசத்தில் போபத்தலாவ, மெனிக்பாலம் மற்றும் கொட்டகலை ரொசிட்டா, போன்ற இடங்களில் உள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைகளுக்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட கால்நடை வளர்ப்பு அமைச்சர் பி.ஹரிசன் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தனது கருத்தில் தெரிவித்ததாவது,

நுவரெலியா பிரதேசத்தில் கால்நடை வளர்ப்புக்கான சகல வளங்களும் இருக்கின்ற நிலையில் இங்கு கால்நடை வளர்ப்புகள் அருகிவருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவித்துள்ளனர். இதனை கருத்திற்கொண்டு இன்று நான் நிலைமையை ஆராய்வதற்காக விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.

இங்கு கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய புதிய அரசாங்கத்தின் ஊடாக எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் வேலைத்திட்டங்களை பூர்த்தியாக்க சில சந்தர்ப்பம் மேற்கொண்டுள்ளேன் என்பதை நான் தெரிவிக்கின்றேன்.

இந்த நாட்டில் கால்நடை வளர்ப்பின் மூலம் பல்வேறு தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மாடுகள் வளர்பின் ஊடாக வருமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் சேகரிப்பு காரணமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் அடிப்படை வசதிகள் மக்களை சென்றடையாத நிலையில் இத்துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை நான் அறிந்திருக்கின்றேன்.

ஆகவே எதிர்வரும் காலத்தில் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தியினை இலக்காக கொண்டு எனது அமைச்சின் மூலம் நல்லதொரு சேவையை முன்னெடுப்பேன் என்றார்.