வெற்றியை தனதாக்கியது இலங்கை

வெற்றியை தனதாக்கியது இலங்கை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை 2-0 என நலுவ விட்டது.

இதனையடுத்து, ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றிவாகை சூடியது.

இதன்படி, இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பாக கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வெளியேறி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 276 ஓட்டங்களை விளாசியது.

இதனையடுத்து 277 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை சார்பாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக்க (65 ஓட்டங்கள்) மற்றும் திலஹரத்ன டில்ஷான் (91 ஓட்டங்கள்) ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் அடுத்ததாக களமிறங்கிய லகிரு திரிமானேவும் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை களங்கடிக்கும் விதமாக சிறப்பாக ஆடினார்.

இதன்படி 46.2 ஓவர்களிலேயே 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிய இலங்கை 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரிமானே 87 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது.

sports