உங்களது இரத்த நிறத்தை அறிய விரும்புகிறீர்களா?

உங்களது இரத்த நிறத்தை அறிய விரும்புகிறீர்களா?

ரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது.

பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற ஒரு புதிய கருத்து வேகமாக பரவி வருகிறது.

ரத்தம் நீலமாக இருக்க வேண்டும் என்று அந்த நிறத்தின் மீது யாருக்கும் தனிப்பட்ட விருப்பு இல்லை. சிவப்பு தான் என்றாலும் யாருக்கும் ஆட்சேபமில்லை.

சிவப்பு நிறமாவது இப்படித்தான்?

சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுகள், பிளாஸ்மா (நீர்மம்) இவையாவும் ரத்தத்தின் பிரதான பகுதிப்பொருள்கள்.

இவை ஒவ்வொன்றுக்குமே ரத்தத்தில் முக்கியப்பணிகள் உண்டு. இதில் ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு காரணமாக இருப்பது சிவப்பணுக்கள்தான்.

இந்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரோட்டின் பகுதி உள்ளது. ஹீமோகுளோபினில் ’ஹீம்’ என்ற துணை செல்லும் உள்ளது.

இந்த ’ஹீம்’தான் ஆக்ஸிஜனோடு இணைகிறது. அதற்கு காரணம் ஹீமில் இருக்கும் இணையும் திறன் கொண்ட இரும்பு மூலக்கூறு.

இரும்புக்கும் ஆக்ஸிஜனுக்குமான பிணைப்பு, ஒளியில் பிரதிபலிப்பதால் சிவப்பு நிறம் ஆக்ஸி-ஹீமோகுளோபினில் தோன்றுகிறது.

அதன் செறிவே சிவப்பணுக்களுக்கும் ரத்தத்துக்கும் சிவப்புநிற ஆதாரமாகிறது.

ஊதா நிறத்தோடு உரசல்

ரத்தம் நீல நிறத்தில் இருப்பதாக கூறப்படுவதற்கு காரணம். வெளீர் நிறத்தில் இருப்பவர்களுக்கு கை மற்றும் உடலின் சில பகுதிகளில நீலம் மற்றும் பச்சை நிறத்தில் நரம்புகள் இழையோடிருப்பதுதான்.

அது உள்ளே இருக்கும் ரத்தத்தின் நிறத்தை பிரதிபலிப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், அந்த நிறம் தோலில் உள்ள நிறமிகள் ஒளி ஊடுருவுவதால் ஒரு பொய் தோற்றத்தை பிரதிபலிக்கும் விளைவுதான்.

மேலும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் இருப்பதால்தான் சிவப்பாக மாறுகிறது என்ற கண்டுபிடிப்பும் துணைவர, ஒருவேளை ஆக்ஸிஜனை பெறுவதற்கு முன்பு நீலமாக இருந்து ஆக்ஸிஜனை பெற்ற பிறகு சிவப்பாகிறதோ என நினைக்கின்றனர்.

ஆக்ஸிஜன் இல்லாத ரத்த நிறம்

ரத்தம் தனது ஓட்டப்பணியில், நுரையீரலை கடக்கும் போது, அங்கிருந்து ஆக்ஸிஜனை பெறுகிறது.

இப்படி ஆக்ஸிஜனை பெற்ற ரத்தம் சுத்த ரத்தமாகவும் பளீர் சிவப்புடனும் மின்னுகிறது.

இந்த ஆக்ஸிஜனை உடம்பில் உள்ள சகலமான செல்களுக்கும் ரத்தமே கடத்துகிறது. ரத்தத்திலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனை செல்கள் தங்களுடைய வளர்சியை மாற்றத்துக்கு(Metabolism) பயன்படுத்துகின்றன.

செல்களின் வளர்ச்சியை மாற்றத்தில் கழிவாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடை ரத்தமே பண்டமாற்றாக பெற்று, நுரையீரல் வரை கொண்டுசென்று வெளியேற்றவும் உதவுகிறது.

ரத்தம் கார்பன் டை ஆக்ஸைடை பெற்றிருக்கும் நிலையில் அசுத்த ரத்தமாக கருதப்படுகிறது.

சுழற்சியில் அதுவும் சுத்த ரத்தமாக மாறினாலும் ஆக்ஸிஜன் இல்லாத அந்நிலையிலும் ரத்தம் கருஞ்சிவப்பு(Dark Red) நிறத்தில் இருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிறத்தில் ஒளியின் பங்கு

ஒளியில் அதிக அலைநீளம் கொண்ட நிறம் சிவப்பு குறைவான அலைநீளம் கொண்ட நிறம் கருநீலம். நாம் பார்க்கும் பொருள்களின் நிறத்தில் ஒளியில் உள்ள நிறங்களின் தாக்கமும் சம்பந்தப்படுகிறது

அதுவே பொருள்களின் நிறத்தில் சமயங்களில் குழப்ப விளைவை ஏற்படுத்துகிறது .

ஒருவேளை ஒளியே இல்லை என்றால் இங்கு பொருள்களின் நிறங்களுக்கு காட்சி ஏது?