சுமாத்ரா தீவில் எரிமலை சீற்றம் – விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை…

சுமாத்ரா தீவில் எரிமலை சீற்றம் – விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை…

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் உள்ள சினபங் மலை என்ற எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ள நிலையில், சில சமயங்களில் அவை வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில், தற்போது சுமாத்ரா தீவில் உள்ள சினபங் மலை என்ற எரிமலை தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறமையினால், நேற்று முதல் அதிக வெப்பத்துடன் கூடிய சாம்பலை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16 ஆயிரம் அடி தூரம் வரை பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டடுள்ளன.

மேலும், எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கக்கூடாது என ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள பிராந்திய எரிமலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.