நீண்ட இடைவேளைக்கு பிறகு வித்யூத் ஜம்வாலுடன் ஸ்ருதிஹாசன்….
கடந்த ஆண்டு வெளியான ‘சிங்கம் 3’ படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு வித்யூத் ஜம்வாலுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களாக படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் ‘சி3’. இது கடந்த ஆண்டு வெளியானது. தெலுங்கில் வெளியான கடைசி படம் ‘கட்டமராயுடு’. தனது தந்தை கமல்ஹாசனுடன் நடித்து வந்த சபாஷ்நாயுடு இன்னும் நிறைவு பெறவில்லை. புதிய படங்களை ஏற்கவில்லை.
சுந்தர்.சி. இயக்கத்தில் நடிக்க இருந்த சரித்திர படத்தில் இருந்து விலகினார். இதற்கிடையே தனது லண்டன் காதலன் மைக்கேல் கார்சோலுடன் வலம் வந்தார். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தான் புதிய பங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதுபற்றி கேட்டபோது, “எனது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டியது இல்லை என்று” ஸ்ருதிஹாசன் பதில் அளித்தார்.
கடந்த ஒருவருட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன் இப்போது மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். இவர் ‘பில்லா-2’, ‘அஞ்சான்’, ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர். இந்த ஜோடியுடன் நஸ்ருதீன்ஷா, அமேல் பாலேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாகும் இதை மகேஷ் மஞ்ரேக்கர் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதை தொடர்ந்து வேறு படங்களிலும் நடிக்கவும் ஸ்ருதிஹாசன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.