டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி…

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி…

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 04 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுல் உடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். ராகுல் 23 ஓட்டங்களிலும், மயன்க் அகர்வால் 21ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து கருண் நாயரும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மில்லர் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். கருண் நாயர் 34 ஓட்டங்களிலும், டேவிட் மில்லர் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் சேர்த்தது.

டெல்லி அணி தரப்பில் லியாம் பிளங்கிட் 3 விக்கெட்களும், அவேஷ் கான், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, கவுதம் கம்பீர் களமிறங்கினர். பிரித்வி ஷா 10 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மக்ஸ்வெல் 12 , கம்பீர் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் – டானியல் கிறிஸ்டன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கிறிஸ்டன் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து அணியின் வெற்றிக்காக போராடினார். தெவாட்டியா 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி பந்து வீச்சில் பரிந்தர் ஸ்ரன், அன்கித் ராஜ்புட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.