பிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…

பிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அவரை சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரி இன்று (25) அடையாள உண்ணாவிதரப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற உண்ணாவிரப் போரட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உப தலைவர் நா.திரவியம், கட்சியிருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ அதிகாரியான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)