“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை இரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றியபோதே , இந்த வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,
இந்த வேலைத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வேலைத்திட்டத்தில் 250 மில்லியன் ரூபாய்க்கான நிதி நிறுத்தப்பட்டு, புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றின் மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படையில், புதிய அரசு தோற்கடிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு, எழுத்துமூலம்
பணிப்புரை விடுக்குமாறு சபாநாயகரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

-ஊடகப்பிரிவு-