ஈஸ்டர் அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதிக்கு

ஈஸ்டர் அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இம்மாதம் 15ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதான குற்றவாளிகள் எவரும் அடையாளப்படுத்தப்படாது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச அதிகாரிகள் ஒருசிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் இறுதியாக கூடிய குழுவின் தீர்மானங்கள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்;

“.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் எமக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை. அறிக்கையை நாம் தயாரிக்கவில்லை. அதேபோல் இந்த ஆணைக்குழு எமது ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஒன்றும் அல்ல.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் இப்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவும், அதேபோல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன்னர் ஜனாதிபதிக்கு ஒரு சாரம்சத்தை பெற்றுக்கொடுக்கவும்,அரசாங்கமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து ஆராயவுமே அமைச்சரவை உப குழுவாக எம்மை நியமித்துள்ளனர். எமக்கு கொடுத்துள்ள பணிகளை நாம் நிறைவுசெய்துள்ளோம்..” என்றார்.