‘தலைவி’ தள்ளிப்போகுது

‘தலைவி’ தள்ளிப்போகுது

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியாக இருந்த ‘தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிபோவதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது ‘தலைவி’ திரைப்படம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதால் அரசாங்கம் ஒருசில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகள் 50% சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளது. இதனால் இந்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் ரிலீஸ் திகதி தள்ளி போகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘தலைவி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது தள்ளி போயுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ திரைப்படம் மறைந்த தமிழக தலைவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். கெட்டப் பலரை வாய் பிளக்க செய்துள்ளது. பார்ப்பதற்கு அப்படியே எம்.ஜி.ஆர் போன்று உள்ளதாக பலரும் அரவிந்த் சாமியை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த வருடமே முடிவடைந்தத நிலையில், ‘தலைவி’ திரைப்படத்தை கடந்த வருடமே வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போனது. இந்நிலையில் அண்மையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, படத்தின் ரிலீஸ் திகதி ஏப்ரல் 23 என அறிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதால் ‘தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தள்ளி போவதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதே போல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் வெளியாகவுள்ள வேறு சில படங்களும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்றைய தினம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.