கண்ணிவெடி அகற்றலில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அமெரிக்கா

கண்ணிவெடி அகற்றலில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அமெரிக்கா

இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றல் பணிகளுக்கு மேலதிகமாக 1.745 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீருக்குள் கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கு உபகரண வசதி மற்றும் ஆதரவு வழங்கும் இரண்டு வார பயிற்சி அமர்வினை அண்மையில் திருகோணமலையில் அமெரிக்க கடற்படை குழுவொன்று நிறைவு செய்தது.

யுத்தத்தின் எச்சங்களாக காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் இலங்கையர்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உதவுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

இன்னும், நீருக்குள் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டறியும் சோனர் கருவி மற்றும் ரோபோக்களும் இலங்கை கடற்படையினருக்கு இதன்போது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நீருக்குள்ளே காணப்படும் எந்தவொரு பொருள் தொடர்பிலும் ஆராய்வதற்கும் கண்டறிவதற்கும் இலங்கை கடற்படையினரின் ஆற்றல் விரிவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளையும் விஸ்தரிக்க முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.