பிள்ளையானை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை

பிள்ளையானை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை

கிழக்கு மாகாண, முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

(2ம் இணைப்பு)

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும், கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சரை தற்போது வரையில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கொலை தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதிப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா மற்றும் ரங்கசாமி கணகநாயகம் என்ற இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.