‘குவாட்’ நாடுகளின் உறுதியுடன்  100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

‘குவாட்’ நாடுகளின் உறுதியுடன்  100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  வொஷிங்டன்) – தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ‘குவாட்’ நாடுகள் உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 100 கோடி தடுப்பூசிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வழங்குவதற்கு ‘குவாட்’ என்னும் 4 நாடுகள் அமைப்பில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவற்றின் தலைவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல்முறையாக காணொளிக்காட்சி வழியாக சந்தித்துப்பேசியபோது உறுதி செய்தனர்.

இந்த 100 கோடி தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ‘குவாட்’ அமைப்பின் வாக்குறுதி நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் இந்தோபசிபிக் கொள்கை பணிப்பாளர் கர்ட் காம்பெல் கூறியதாவது,

நாங்கள் இது தொடர்பாக இந்தியாவுடனும், எங்கள் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்திய நண்பர்களுக்கு இது ஒரு கடினமான கால கட்டம் என்பது வெளிப்படையாகவே தெரியும்.

இதில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து நின்று தனியார் மற்றும் பொதுத்துறையினரை கொண்டு வரவும் அமெரிக்கா முயற்சித்துள்ளது.

தனியார் துறையிலும், அரசுடனும் எங்கள் கூட்டாளிகளுடனான ஆலோசனை, அடுத்து ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்குவதற்கான பாதையில் நாங்கள் உறுதிபட உள்ளோம் என்பதை காடடுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மார்ச் மாதம் 12-ம் திகதி காணொலிக்காட்சி வழியாக நடத்திய சந்திப்பில் பிரதமர் மோடியும், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரீசனும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவும் கலந்துகொண்டு பேசியது நினைவுகூரத்தக்கது.