சீனாவில் ஹோட்டல் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

சீனாவில் ஹோட்டல் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று(14) 17 ஆக உயர்வடைந்தது.

சுசோ நகரில் கடந்த 12ம் திகதி பிற்பகல் இடிந்து விழுந்த சிஜி கயுவான் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 36 மணிநேர தேடல் நடவடிக்கைக்கு பின்னர் மீட்புப் பணியாளர்கள் 23 பேரை கண்டு பிடித்தனர்.

அவர்களில் 6 பேர் உயிருடன் காணப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க கிரேன்கள், ஏணிகள், உலோக வெட்டிகள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மாத்திரமன்றி மீட்பு நடவடிக்கைக்கு 120 வாகனங்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு படையினர் திரட்டப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்துக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் ஆராய்வார்கள், மேலும் ஹோட்டலின் சட்ட பிரதிநிதிகள், மேலாளர்கள் மற்றும் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பணியாற்றியவர்கள் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று தளங்கள், 54 அறைகள் கொண்ட சிஜி கெயுவான் ஹோட்டல் 2018 இல் திறக்கப்பட்டது என்று சீன ஆன்லைன் முன்பதிவு பயன்பாடான சிட்ரிப் தெரிவித்துள்ளது.

சுசோ ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது வரலாற்று கால்வாய்கள் மற்றும் பாரம்பரிய சீன தோட்டங்களுக்கும், ஒரு பெரிய வணிக மையத்திற்கும் பெயர் பெற்றது.