காஷ்மீர் – யவ்ம் இ இஸ்தீஹ்ஸால் 

காஷ்மீர் – யவ்ம் இ இஸ்தீஹ்ஸால் 

(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்லாமாபாத்) –  மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற]) முஹம்மது சாத் கட்டக், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரானது மிக கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகையின் கீழ் 730 நாட்களை நிறைவு செய்கிறது.

ஜனாதிபதி உத்தரவின் மூலம் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு மற்றும் 35A பிரிவு ரத்துச்செய்யப்பட்டது. 370 வது பிரிவு ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியது மற்றுமல்லாது இந்திய அரசியலமைப்பின் இந்திய மாநிலங்களுக்கு உள்ள அனைத்து விதிகளும் ஜம்மு -காஷ்மீருக்கு செல்லுபடியாகாது என்றும் குறிப்பிட்டது.

இந்த 370வது பிரிவின் காரணமாக, ஜம்மு -காஷ்மீர் ஒரு பிராந்தியமாக இருந்து ஒரு தனி அரசியலமைப்பு, கொடி மற்றும் உத்தியோகபூர்வ மொழியை அனுபவித்து வந்தது. 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் நீண்ட காலத்திற்குப் பிறகு நீக்கப்பட்டதோடு 35A பிரிவானது காஷ்மீர் அல்லாதவர்கள் சொத்து மற்றும் வேலைகளைப் பெறுவதை தடை செய்தது.

இந்திய அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு -காஷ்மீர் மற்றும் சட்டமன்றம் அற்ற லடாக் ஆகியவையாகும்.

ஆகஸ்ட் 05 மற்றும் அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் செய்யப்பட்ட முக்கிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, கைத்தொலைப்பேசி, தொலைக்காட்சி, லேண்ட்லைன் தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். அதே நேரத்தில் இராணுவம் மற்றும் விமானப் படையினரும் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 38,000 கூடுதல் துருப்புக்கள் நிறுத்தப்பட்டதால் அச்சமும் கவலையும் ஏற்கனவே பிடித்திருந்தது. முக்கிய இந்து யாத்திரையான அமர்நாத் யாத்திரையை ரத்துசெய்யப்பட்டது. பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொல்லப்பட்டனர். ஊடகங்களுக்கும் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். உள்ளூர் செய்திபத்திரிக்கைகள் தங்கள் இணைய பதிப்புகளைக் கூட வெளியிட முடியாமல் ஆக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான செய்திபத்திரிக்கைகள் பல மாதங்களாக அச்சிட முடியவில்லை.

உலகிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கு இப்பகுதியின் எந்தச் செய்தியும் சென்றடையவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீர் கிட்டத்தட்ட உலகிலிருந்தே துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியாக காணப்பட்டது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து , ஹுரியத் தலைவர்கள், அரசியல் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் மத, வர்த்தகம் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் உட்பட சுமார் 15,000 அப்பாவி காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டனர்.சையது அலி கிலானி மற்றும் மிர்வைஸ் உமர் பரூக் உட்பட அனைத்து எதிர்ப்புத் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர் அல்லது சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் முதல்வர்களான பாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் கூட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த இராணுவ ஒடுக்குமுறையின் போது, 8 மில்லியனுக்கும் அதிகமான காஷ்மீரிகள் தங்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். பல மாதங்களாக தொடர்ச்சியான இராணுவ முற்றுகை பல நெருக்கடியை உருவாக்கியது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் குழந்தைளுக்கான உணவு வகைகள் ஆகியவை கடுமையாக பற்றாக்குறையாகின.

அதே நேரத்தில், இந்தியப் படைகள் வன்முறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. 5 ஆகஸ்ட் 2019 முதல் இந்த ஆண்டு ஜூன் 30 வரை, இந்தியப் படைகளால் 384 காஷ்மீரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி குறைந்தது 3,903 பேரை காயப்படுத்தியுள்ளன. 1,022 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளனர். 118 பெண்கள் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்திய மோடி அரசின் ஆகஸ்ட் 05 நடவடிக்கையானது பாகிஸ்தான் முழுவதும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் மக்களும் அரசாங்கமும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு தமது கரிசனையை வெளிப்படுத்தியதோடு காஷ்மீர் பிரச்சனைக்கு பாகிஸ்தானின் ஆதரவை உறுதிப்படுத்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்களின் துன்பங்களை சர்வதேச மாநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. பொதுச் சபையில் தனது உரைகளில் காஷ்மீர் மக்கள் மீதான மோசமான இந்திய கொடுமைகள் குறித்து உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இத்தகைய இந்திய நடவடிக்கைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் பலமுறை உலகை எச்சரித்தார்.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்கள் மீதான இந்திய கொடுமைகள் குறித்து உலகத் தலைவர்களை தொடர்ந்து நினைவூட்டி வருகிறது. ஆகஸ்ட் 05, 2019 முதல், பாகிஸ்தான் பாராளுமன்றம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய ஜம்மு -காஷ்மீரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது கரிசனையை வெளிப்படுத்தி பல சட்டத் தீர்மானங்களை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானங்களின் ஒரு பகுதியாக, இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்ட ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் திகதி ‘யவ்ம் -இ-இஸ்தீஹ்ஸால் ‘(சுரண்டல் தினம்) அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிகழ்வைக் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கம், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவையும் கரிசனையையும் காட்டுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான இந்திய தீய நடவடிக்கைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 05 மற்றும் அதற்குப் பிறகு இந்திய மோடி அரசு மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காஷ்மீர் பிரச்சினையை உலகம் முழுவதற்கும் அம்பலப்படுத்தின. பாகிஸ்தானின் தொடர் முயற்சிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவ முற்றுகையால் ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல் நிலைமைகளானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காஷ்மீர் மீதான அமர்வை மூன்று முறை நடத்தச் செய்தது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய முன்வந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷெல் பாச்லெட், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் OIC, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட உலக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்த அச்சத்தை சர்வதேச கண்காணிப்பு அமைப்பான இனப்படுகொலைக்கான கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.