முட்டை விலையும் அதிகரிப்பு

முட்டை விலையும் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மா, சீமெந்து, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை அடுத்து, பால் மற்றும் முட்டை விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

முன் மொழியப்பட்ட எரிபொருள் விலை உயர்வால், போக்குவரத்துத் தொடர்பிலான செலவுகளைக் கருத்தில்கொண்டு, அத்தியவசியப் பொருள்களின் விலை உயர்வுடன் மக்கள் ஏற்கெனவே போராடி வருகின்றனர்.

இருப்பினும், முட்டை விலையையும் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்று, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்பு 15 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை விற்பனையாகி வந்த முட்டையின் விலை, தற்போது 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக, அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன, பாலுக்கான விலை உயர்வைக் கோரியுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து பசும் பால் ஒரு லீட்டருக்கு 50 – 60 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் வாங்கப்படுவதாகவும், ஆனால், அதன் விற்பனை விலை 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை 7 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.