கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுப்பெற்றமையால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் (KassymJomart Tokayev) இனால் இரு வாரங்களுக்கு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது .

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் பெரிய நகரான அல்மட்டி மற்றும் மேற்கு மங்கஸ்தாவு மாகாணத்தில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றிருந்தன.

இரவு 11 மணியிலிருந்து காலை 7 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தேசிய சொத்துக்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வீழ்த்தப்படுவதில்லை எனவும் தொடர்ந்தும் தமது ஆட்சி முன்னெடுக்கப்படும் எனவும் கஜகஸ்தான் அரச தரப்பு தெரிவித்துள்ளது .

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.