தொடர்ந்தும் தடையின்றிய மின்சாரம்

தொடர்ந்தும் தடையின்றிய மின்சாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்ததாக அதில் கலந்து கொண்டிருந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

“.. தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது, தொடர்ந்து விநியோகத்தை மேற்கொள்வதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது.

முடியுமான அளவு மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதியும் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறு தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்வது என்பது தொடர்பில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் ஆராயப்பட்டது. தடையின்றி தேவையான எண்ணெய்யை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மின்சார சபையிடம் இருந்து பாரிய தொகை கனியவள கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று அந்த தொகையைச் செலுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்..” என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.