உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஒரு ஆட்டத்தில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), தரவரிசையில் 2-ம் நிலை வகிக்கும் சிமோனா ஹாலேப்புக்கு (ருமேனியா) 7-6 (5), 6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி அளித்தார்.

ராட்வன்ஸ்காவுக்கு இது 500-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ஷரபோவா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான இத்தாலியின் பிளவியா பென்னட்டாவை தோற்கடித்தார். ‘ரெட்’ பிரிவில் ஷரபோவா 3 வெற்றிகளுடன் கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

ஹாலேப், ராட்வன்ஸ்கா, பென்னட்டா தலா ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் சமநிலையில் இருந்தனர். செட் அடிப்படையில் ராட்வன்ஸ்கா அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ஹாலேப், பென்னட்டா வெளியேற்றப்பட்டனர். 33 வயதான பென்னட்டா ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச டென்னிசில் இருந்தும் விடைபெற்றார்.