தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்பட்டால் ஒரு வாரத்தில் வரிசைகளுக்கு முடிவு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்பட்டால், ஒரு வாரத்தில் அனைத்து வரிசைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

QR முறைமையின்படி வெற்றிகரமாக எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 800 நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருளை பெற்றுக்கொள்வதாக தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையமும் நாளொன்றுக்கு 19800 லீற்றர் எரிபொருளைப் பெறுகின்ற அதேவேளை, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு 6600 லீற்றர்களை மாத்திரமே பெறுவதாக செயலாளர் தெரிவித்தார்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சமமாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டால், இந்த எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.