சீனாவில் அதிரடி தீர்ப்பு: ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை..

சீனாவில் அதிரடி தீர்ப்பு: ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை..

(ஃபாஸ்ட் நியூஸ்) –  சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67). இவர் ஊழல் செய்து சுமார் ரூ.138 கோடி மதிப்புள்ள பணம் பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.

பீஜிங்: சீனாவைப் பொறுத்தமட்டில் 2012-ம் ஆண்டு, ஜின்பிங் அதிபர் பதவி ஏற்றது முதல், ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். அவர் பதவிக்காலத்தில் இதுவரை சீன கம்யூனிஸ்டு கட்சியின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சீன ராணுவத்தின் டஜன் கணக்கிலான அதிகாரிகள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், அதிபர் ஜின்பிங் தனது செல்வாக்கை, அதிகார தளத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ள உதவி இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67).

இவர் தனது பதவியை, அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பலரது தொழில், வணிக நடவடிக்கைகள், உத்தியோக நிலைகள், சட்ட வழக்குகளில் போன்றவற்றில் உதவிக்கரம் நீட்டி, அதற்காக ஆதாயங்கள் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

பு ஜெங்குவா ஊழல் வழக்கில் சிக்கியது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பீஜிங் மாநகராட்சி பொது பாதுகாப்பு பணியகத்தின் தலைவராகவும், பொது பாதுகாப்பு துணை மந்திரியாகவும், நீதித்துறை மந்திரியாகவும் பணியாற்றியபோது இவர் ஊழல் செய்து 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.138 கோடி) மதிப்புள்ள பணம், பரிசுகளை நேரடியாகவோ, தனது உறவினர்கள் மூலமாகவோ பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இது தொடர்பான வழக்கை சாங்சூன் நகர இடைநிலை மக்கள் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவில் பு ஜெங்குவா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 2 ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதை அந்த நாட்டின் அரசு இணைய ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் ஜின்பிங் பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைய உள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 16-ந் தேதி பீஜிங்கில் நடக்க உள்ளது. அதில் ஜின்பிங் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.