நாட்டில் கோழி, முட்டைக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் கோழி, முட்டைக்கு தட்டுப்பாடு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கோழிப்பண்ணைகளில் முட்டையிடும் கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழிலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன விலை அதிகரித்துள்ளதால், முட்டைகளை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தில் தீவனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போதுள்ள முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குணசேகர தெரிவித்துள்ளார்.

இனப்பெருக்க நோக்கத்திற்காக அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 80,000 முட்டையிடும் கோழிகளை இறக்குமதி செய்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு 9,000 மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டில் கோழிக்குஞ்சுகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும், இந்த நிலை தொடருமானால், தற்போதுள்ள முட்டை மற்றும் கோழிக்குஞ்சு தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் குணசேகர தெரிவித்துள்ளார்.