இருபதுக்கு 20 உலகக்கிண்ண<br />தொடரை வென்றது இங்கிலாந்து அணி..!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண
தொடரை வென்றது இங்கிலாந்து அணி..!

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஷான் மசூத் 38 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 32 ஓட்டங்களையும், ஷதாப் கான் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய பாகிஸ்தான் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 12 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீத் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், க்றிஸ் ஜோர்டன் 27 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 08 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக பென் ஸ்டொக்ஸ் 52 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 26 ஓட்டங்களையும், மொயீன் அலி 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், ஷதான் கான் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 09 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற இரண்டாவது இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடராகும்.

ஏற்கனவே 2010ஆம் ஆண்டு முதல் முறையாக இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது.