பரீட்சைத்தாளில் கோட்டை விட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் – மக்கள் விசனம்

பரீட்சைத்தாளில் கோட்டை விட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் – மக்கள் விசனம்

வடமாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப் பரீட்சை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இறுதிப்பரீட்சை வினாத்தாள்களில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் தமது விசனத்தை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் மாணவர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில், ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான பதிலும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தது.

அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக ‘நபியவர்களின் நாய்’ எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

மாத்திரமின்றி, மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக ‘நரி (ஸல்) அவர்களின் தாயாரின் பெயர் என்ன என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இதேபோன்று முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களிலும் பல எழுத்துப்பிழைகள் காணப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள், அதனை கணிணி மூலம் தட்டச்சு செய்பவர்கள், பின்னர் அதனை ஒப்பு நோக்குபவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பல தடவைகள் எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா, அல்லது சொற்பிரயொகங்களில் ஏதும் பிரச்சினைகள் இருக்கின்றதா உள்ளிட்ட விடயங்களை கவனிப்பதுடன், பிழைகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வாறு சரியான முறையில் தயாரிக்கப்படாமையினாலேயே இஸ்லாம் பாடத்தில் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத்தில் பிழை ஏற்பட்டுள்ளன.

எனவே, மன்னார் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

exam-paper

exam-paper..