மனைவியின் முறைப்பாட்டால் சடலமாக மீட்கப்பட்ட கணவன்

மனைவியின் முறைப்பாட்டால் சடலமாக மீட்கப்பட்ட கணவன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவி கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன மேற்படி நபரின் சடலம் தெமடகஹகந்த பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியில் சிக்கி அந்த நபர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, வெறிச்சோடிய கிணற்றில் சடலத்தை வீசி மூடியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமடகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

COMMENTS

Wordpress (0)