கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீனில் வாழ்ந்து இறையாட்சி பற்றி மக்களுக்கு போதித்து, சிறையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்து 3 நாட்களின் பின் கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

நியாயமும் சத்தியமும் என்றும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுவின் உயிர்த்தெழுல் நிகழ்வு அமைந்துள்ளது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மனிதர்களுக்கு புதுவாழ்வு கிடைத்ததுடன், பேரின்பத்திற்கான வழியும் திறக்கப்பட்டதாக கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதுடன், 40 நாள் தவக்காலம், உயிர்த்த ஞாயிறான இன்று முடிவடைகிறது.

இன்றைய நன்நாளில் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று, விசேட வழிபாடுகளில் ஈடுபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்படும் மரபு ரீதியான செயற்பாடாகும்.

இதற்கிடையில், நேற்று (19) இரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட ஆராதனை நேற்று இரவு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்றது.

அத்துடன் இன்றும் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

இதற்கிடையில், கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு நாளையுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திதகி நடந்த இந்த தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், புனித வெள்ளியான கடந்த 18 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

COMMENTS

Wordpress (0)