பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா.சபையின் வற்புறுத்தலையடுத்து தன்னிடம் இருந்த அணு ஆயுதங்களை ஈரான் அழித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிரி நாடாக மாறியுள்ள சவுதி அரேபியா, ஈரானை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதங்களை விலைக்கு வாங்குவதாக வெளியாகியுள்ள தகவலையடுத்து பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ‘ஆம், இதுபோன்ற தகவல்கள் நிச்சயமாக கிடைத்துள்ளன. ஆனால், அணுகுண்டுகளை அவ்வளவு சாமான்யமாக வாங்கி, கைமாற்றிவிட முடியாது.

அதன் எதிரொலி மிக கடுமையானதாக இருக்கும். சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறியதற்காக விற்கும் நாடும், வாங்கும் நாடும் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரும்.

இந்த முயற்சி தங்களுக்கு பாதுகாப்பனதல்ல, அது அவ்வளவு எளிதானதுமல்ல!. ஈரான் சந்தித்தைப்போல் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரசு அறிந்திருக்கும் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

சவுதி மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான எதிர்விளைவை சந்திக்க நேரிடும் என சமீபத்தில் பாகிஸ்தான் எச்சரித்திருந்தது.

இதையடுத்து, ஈரானுக்கு சரியான பதிலடி தரும்வகையில் பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை கொள்முதல் செய்ய சவுதி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச உளவு வட்டாரங்கள் மூலம் கசிந்த தகவல், சில வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா தற்போது கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.