நாட்டின் பொருளாதாரப் புரட்சியில் கைத்தொழில்,வர்த்தக அமைச்சும் கணிசமான பங்காற்றும்.

நாட்டின் பொருளாதாரப் புரட்சியில் கைத்தொழில்,வர்த்தக அமைச்சும் கணிசமான பங்காற்றும்.

 

நல்லாட்சி அரசாங்கத்தில் 1௦ இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைத் பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, ௦2 இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை வழங்கும் பொறுப்பை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஏற்கவுள்ளது என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மைதானதில் இன்று (12) இடம்பெற்ற, யுஎஸ்.ஏய்ட்(USAID) அமைப்பு மற்றும் நீயூக்கிலியஸ் பவுன்டேஷன் ஏற்பாட்டில் இலங்கை கைத்தொழில் அதிகார சபையும் (IDB) இணைந்து நடாத்திய, சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி மற்றும் மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

நான்கு மதத்தவர்களும் ஒன்றிணைந்து, இன ஒற்றுமைக்காக, பொருளாதார மேம்பாட்டுக்காகஒரு சிறந்த வேலைத்திட்டத்தினை இதனூடாக செய்திருப்பதை பார்க்கையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

தொடர்ந்தும் இவ்வாறான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில், எமது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கி, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு, வெளிநாட்டு தூதுவரலாயத்தில் இருக்கின்ற வியாபர உத்தியோகத்தர்களின் உதவிகளையும் பெற்று சிறந்த ஒரு திட்டமிடல் மூலம் இதனை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.

அந்த வகையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்கு இருக்கக் கூடிய கைத்தொழிலாளர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், கடன் வசதிகள், சந்தைப்படுத்தல் ஏற்றுமதி வசதிகள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை இனங்கண்டு அதனைப் பயன்படுத்தி அவர்களை

சொந்தக் காலில் நிற்கக் கூடியவர்களாக மாற்றுவதற்கான வேலைத் திட்டத்தினை வரும் மே மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தினை வரும் மே மாதம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

மேலும், இந்நாட்டின் ஜனதிபதி மற்றும் பிரதமர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவோம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல் 1௦ இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைத் பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்கள். அதனடிப்படையில் இரண்டு இலட்சம் பேருடைய பொறுப்பை எமது அமைச்சு ஏற்கவுள்ளது. இந்த வேலைதிட்டதின் ஊடாக இந்நாட்டிலே ஒரு பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என நான் நம்புகின்றேன் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இதனை சிறப்பாக நடாத்த உதவியபாடசாலை அதிபர், அரசாங்க அதிபர், இணைப்பாளர்கள் ஆகியோருக்கும் அமைச்சர் தமது நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக்கொண்டார்.