இன்று முதல் மின்சார விநியோகம் வழமை நிலைக்கு

இன்று முதல் மின்சார விநியோகம் வழமை நிலைக்கு

நாடுதழுவிய ரீதியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மின் வெட்டு இன்று(17) முதல் வழமைக்குத் திரும்பும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் திருத்தல் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நேற்று(16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பியகம உப மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததை அடுத்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனை சீர்செய்வதற்கு காலம் தேவைப்பட்டது.

இதன்காரணமாக இடைக்கிடையே மின் விநியோகம் பல பிரதேசங்களுக்கு தடைப்பட்ட வண்ணமிருந்தது. இருந்தபோதிலும் அதற்கான நேர காலத்தை வகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இல்லையேல் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதனை அறிந்தோம்.

இதன் அடிப்படையில் இதற்கான நேர அட்டவணை ஒன்றை வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நேற்றைய தினம் நுரைச்சோலை அனல் மின்நிலைய சீர்திருத்தப் பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இன்று முதல் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியும் என்றார்.