தாஜுதீன் கொலை விவகாரம் – கோத்தபாய பயந்தே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்

தாஜுதீன் கொலை விவகாரம் – கோத்தபாய பயந்தே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை, அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாகவே, அவரை பார்ப்பதற்காக கோத்தபாய சென்றுள்ளதாக சில ஊடகங்களால் மேற்கோற்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் வைத்து கோத்தபாயவை கைது செய்ய முடியாதென ஒரு சிலர் ஊடாக தகவல்களை அறிந்துகொண்டே கோத்தபாய இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி செல்வதற்கு வேறு சில காரணங்கள் உள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

தாஜுடீனின் கொலை தொடர்பில் தகவல்களை மறைத்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாரஹென்பிட்டிய பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவின் வாக்குமூலத்திற்கமைய, முன்னாள் சிரோஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு சட்டவிரோத உத்தரவை வழங்கியது அனுர சேனாநாயக என சுமித் சம்பிக்க பெரேரா வாக்குமூலம் வழங்கியவுடன், அனுர சேனாநாயக தன்னை சட்டவிரோதமாக செயற்பட உத்தரவிட்டது யார் என வாக்குமூலம் வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளார்.

இதன்போது தாஜுடீன் கொலை மாத்திரமன்றி மேலும் பல சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உத்தரவிட்டது யார் என வாக்குமூலம் வழங்குவதன் ஊடாக, அனுர சேனாநாயக்க கோத்தபாய ராஜபக்ஷவை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற அச்சம் காரணமாகவே கோத்தபாய அமெரிக்காவுக்கு தப்பியோடியதாக மேலும் தகவல்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

எனினும் கோத்தபாயவை கைது செய்வதற்கான அவசியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுமாயின், கோத்தபாய அமெரிக்காவில் இருப்பது அதற்கு தடையாக அமையாதென அமெரிக்க இராஜதந்திர தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.