முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட கலந்துரையாடல் – அமைச்சர் ரிஷாத்
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்தால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (25) இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியூதீன் கலந்துகொண்டார்.
நாவாந்துறை, சாவகச்சேரி, மண்கும்பான் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வீட்டுத்திட்ட தேவைகள், சமுர்த்தி கொடுப்பனவுகள், வீதி புனரமைப்பு மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் குடிநீர் தேவைகள் என தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
அவற்றுள் ஒரு சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்த அமைச்சர், ஏனைய பாரிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.