JVP குறித்த திவயின செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டில்வின்

JVP குறித்த திவயின செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டில்வின்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் சிங்கள தேசிய நாளிதழான திவயின பத்திரிகை நேற்றையதினம்(07) வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா அறிவித்துள்ளார்.

தற்பொழுது இது தொடர்பில் கண்டறிய சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கும், பத்திரிகை சபைக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரினால், வெளிக்கொண்டுவரும் உண்மைகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களினால், கட்சியின் நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான ஒரு முயற்சியே இந்த பொய்யான செய்தி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.