சீனாவில் துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸார் பலி ஐவர் காயம்

சீனாவில் துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸார் பலி ஐவர் காயம்

வடக்கு சீனாவின் புறநகர் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பொலிஸார் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

ஹெபெய் மாகாணம், சனிங் கவுன்ட்டி, ஜிஷிபாவ் என்ற கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

இங்கு லியு ஷாங்ருயி என்ற 40 வயது நபர் ஒருவர் இரட்டைக்குழல் வேட்டைத் துப்பாக்கி மூலம் அருகில் வசிக்கும் இருவரை சுட்டுக்கொன்றார். மேலும் மூவரை சுட்டு காயப்படுத்தினார்.

தகவலின் பேரில் அங்கு போலீஸார் வந்தபோது, அவர்கள் மீதும் அவர் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 2 பொலிஸார் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமுற்றனர்.

இதையடுத்து அவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வராக இருக்கலாம் என பொலிஸ் வட்டாரங்கள் கருதுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.