கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சியினால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி திருகோணமலை- சம்பூர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதுடன் சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததுடன், குறித்த மனுவில் முதலமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நட்ட ஈட்டுத் தொகையொன்றை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் அந்த மனுவில் கேட்டிருந்தார்.
குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரரால் கூறப்பட்ட கோரிக்கையானது முகத்தோற்ற அளவில் அடிப்படையற்ற காரணங்களைக் கொண்டு இந்த வழக்கைத் தொடர முடியாதெனக் கூறிய நீதிபதிகள் வழக்கினை தள்ளுபடி செய்தனர்.