ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், அதன் பாதுகாப்பு அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கண பதமுரே மைதானத்தில் இரவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 52 வயதுடைய ரம்புக்கண பொலிஸ் நிலையத்தில் இணைந்து கடமையில் ஈடுபட்டு வந்த அதிகாரி என தெரியவந்துள்ளது.

கேகாலையில் நாளையதினம் நடைபெறும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்தார். இந்நிலையில் நிகழ்வு நடைபெறவிருந்த மைதானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியுடன் மேலும் ஒரு பொலிஸ கான்ஸ்டபில் மைதானத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த பொலிஸ் அதிகாரி மலசலகூடத்திற்கு சென்றவர் திரும்பி வராத காரணத்தினால் அவருடன் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபில் இது தொடர்பில் தேடிப் பார்த்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மலசலகூடத்திற்கு அருகில் இந்த பொலிஸ் அதிகாரி விழுந்து கிடந்துள்ளார். இதன் போது அவர் உயிரிழந்தே காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.