துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற தமிழில் தேர்வு எழுதலாம்

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற தமிழில் தேர்வு எழுதலாம்

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்படுகிறது. வாகனங்களை இயக்கி ஓட்டி காட்டுவதற்கு முன்பு இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தற்போது துபாய் நாட்டில் ஆங்கிலம், உருது, அரபு ஆகிய மூன்று மொழிகளில் எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது.

தங்கள் தாய் மொழியில் எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருந்து செல்பவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை துபாய் நாடு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து தமிழ், இந்தி, வங்காளம், மலையாளம் ஆகிய 4 மொழிகள் டிரைவிங் லைசென்சு தேர்வுக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாக துபாய் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. எனவே துபாயில் டிரைவிங் லைசென்சு பெற விரும்பும் இந்தியர்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும்.

இது தொடர்பாக துபாய் நாட்டின் ஓட்டுனர்கள் பயிற்சி மற்றும் தகுதிகள் அமைப்பின் இயக்குனர் ஆரிப் அல்மலேக் கூறியதாவது:–

டிரைவிங் லைசென்ஸ் தேர்வுக்கு வருபவர்களுக்கு முதலில் திரையில் சில கேள்விகள் காண்பிக்கப்படும். அதை படிக்க முடியாதவர்களுக்கு குரல் பதிவு மூலம் கேள்விகள் கேட்கப்படும்.

இந்த நவீன வசதியை பயன்படுத்தி விடையை சொல்லலாம். துபாயில் டிரைவிங் லைசென்சு பெறுபவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய மொழிகளை தேர்வுக்கு சேர்த்துள்ளோம் எனக் தெரிவித்தார்.