நீதிமன்றில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு..

நீதிமன்றில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு..

தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில், போலி தொண்டு நிறுவனங்களின் பெயரால் பல கோடி நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு தொடர்பு உண்டு என கூறப்படுகிறது. அவரது பதவியை பறிக்க பாராளுமன்றத்தில் குற்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் அந்நாட்டின் அரசியல் சாசன சட்ட கோர்ட்டில் நேற்று(03) ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுத்து விட்டார்.

இந்த ஊழலில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிற அவரது கூட்டாளிகள் நாளை(05), அரசியல் சாசன கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அப்போது அவரும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் அவரை வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என கோர்ட்டு கூறுகிறது. அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர மறுத்து விட்டால், சட்டம் தனது கடமையை செய்யும் என கோர்ட்டு கூறி உள்ளது.

ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர மாட்டார் என அவரது வக்கீல் லீ ஜங் ஹவான் கூறி உள்ளார்.

இந்த கோர்ட்டு விசாரணைதான், பார்க்கின் பதவியை நிரந்தரமாக பறிக்க வேண்டுமா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும். அவரது பதவி பறிக்கப்பட்டால் 60 நாளில் அதிபர் தேர்தல் நடத்தப்படும்.