காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு…

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு…

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்று(22) இரவு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்குள்ளான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி, விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பொலிசாரினால் வைத்தியசாலையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசாரும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.