2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 10 முதல்…

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 10 முதல்…

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் திருத்தப் பணிகளின் முதற்கட்டப் பணிகள் தற்போது நிறைவுக்கு வரவுள்ளதாகவும், இதன் இதன் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்கள், புதிதாக உட்சேர்க்கப்பட்ட வேண்டிய பெயர்கள் என்பவற்றை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல்கள் மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இந்தப் பட்டியல்களைப் பரிசீலணை செய்வதன் மூலம், எவரேனும் தகைமையுள்ள ஒரு வாக்காளரின் பெயர் 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்படவில்லை என தெரியவருமிடத்து, அவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.

அதேநேரம், தகைமையற்ற ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பின் அவருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் அவகாசம் உள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

R.Rishma