உரைப்பையில் சிசுவினை புதைத்த இளம்தாய் கைது

உரைப்பையில் சிசுவினை புதைத்த இளம்தாய் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தனக்கு வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்தியப் பரிசோதனையின்போது குறித்த பெண் சிசுவொன்றை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அப்பெண்ணிடம் வைத்தியர்கள் விசாரித்தபோது, தான் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு நேற்று இரவு பொலிஸார் சென்றுள்ளனர்.

அங்கு, குறித்த இளம் தாயின் குடிசைப்பகுதி அமைந்துள்ள மணல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சிசு துணிகளினால் சுற்றி உரப்பையில் இட்டு புதைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பகுதியின் கிராம அலுவலர்; நிர்மலா சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாய் கைது செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(riz)