வெங்காயம், உழுந்து மற்றும் உரு​ளைக் கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு

வெங்காயம், உழுந்து மற்றும் உரு​ளைக் கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், 125 ரூபாவாகக் காணப்பட்ட உழுந்தின் இறக்குமதி வரி 200 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் இறக்குமதி வரியானது 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

படைப்புழுவால் சோளம் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருக்க சோளத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படைப்புழு முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முடிந்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.