காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

தெனியாய பெவர்லி கீழ்ப்பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயில் சுமார் 30 ஏக்கர் காட்டுப்பகுதி முற்றாக தீயால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பைன்ஸ் மரங்களும், மூடு பயிர்களும் அதிகமாகக் காணப்படும் குறித்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் பரவிய காட்டுத் தீயில், மரங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தோட்ட மக்கள் பெரும் முயற்சி செய்த போதிலும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போயுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த காட்டுத் தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பில் வனத்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.