ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பிரபாகரனின் சடலத்தையும் தோண்டலாம் – மஹிந்தானந்த

ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பிரபாகரனின் சடலத்தையும் தோண்டலாம் – மஹிந்தானந்த

அரசியல் இலாப உள்நோக்கங்களுக்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து கூறுகையில்;

சடலங்களை தோண்டியெடுத்து மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் சுயரூபத்தை மாற்றுவதற்காக திருடன் என்று கூறினார்கள். அதனையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது மஹிந்த ராஜபக்ஷவை கொலையாளி என வர்ணிக்க முயற்சிக்கின்றார்கள். இதனையும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எதிர்வரும் நாட்களில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தோண்டினால் தான் வெற்றி பெற முடியும் என கூறினால் ரணில் விக்ரமசிங்க அதனையும் செய்வார்.

நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு விடயத்தை கூற விரும்புகின்றோம், கடந்த 5 மாதங்களினுள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு என்ன செய்ததென்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

ஜனவரி மாதம் 08ம் திகதி செய்த தவறு மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது. மக்கள் அத்தவறினை மீள் சரிப்படுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

(riz)