“சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம்..” – சிறுவன் வாக்குமூலம்

“சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம்..” – சிறுவன் வாக்குமூலம்

(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குததாரி சஹ்ரான் உடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயதுடைய கெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்த முஹம்மத் நௌபர் அப்துல்லா எனும் சிறுவன் ஒருவன் நேற்று(16) அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது வாக்குமூலம் இவ்வாறு அமைந்திருந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவன் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரான நௌவர் மௌலவியின் மகன் எனவும், கைது செய்யப்பட்ட சிறுவன் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தந்தை சுற்றுலாவிற்காக தன்னை நுவரேலியாவிற்கு அழைத்துச் சென்றதாகவும் இதன் போது அங்குள்ள வீடு ஒன்றில் தங்கியதாகவும் தெரிவித்து குறித்த சிறுவன், தாங்கள் குறித்த வீட்டிற்கு செல்லும்போது அங்கு 4 அல்லது 5 மௌலவிமார்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரவாகும் போது 28 அல்லது 30 பேர் வரை அங்கு வந்ததாகவும் அன்றிரவு அங்கு உறங்கியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

பின்னர் அடுத்த நாள் காலை பிரசங்கம் ஆரம்பமானதும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் பூராகவும் பிரசங்கம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரசங்கங்களில் ஜிஹாதின் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் இதன்போது பெரிய துப்பாக்கி ஒன்று மற்றும் சிறிய துப்பாக்கி ஒன்றையும் காட்டியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெடிபொருள் தயாரிக்கும் விதம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

பின்னர் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கப்பட்டதாகவும் தனக்கு ‘அபூஹசம்’ என பெயர் வைக்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகவும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னரே தங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.