இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 60 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கும் முடிந்துள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே எதிர்பார்ப்பதாக காலி டெஸ்ட் போட்டி முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் திமுத் குறிப்பிட்டார்.

மேலும், டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் போட்டிக்கு போட்டி தான் நாம் திட்டமிடுகிறோம். இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே நாம் முயல்கிறோம்.

அப்போது வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் அந்தந்த அணிகளுக்கு அமைய எவ்வாறு விளையாடுவது, போட்டியை வெல்ல முடியுமா, சமநிலை செய்ய முடியுமா என்பது பற்றி திட்டமிட நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டி உள்ளது.

இப்போது நாம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்திருக்கிறோம். எதிர்வரும் போட்டிகளில் வென்று இரண்டு ஆண்டுகளில் அந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்” என திமுத் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அணிக்கு அதிக உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் தான் வழங்கி இருப்பதாகவும் திமுத் கருணாரத்ன மேலும் குறிப்பிட்டிருந்தார்.