கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரான்சில் கோடை வெயிலுக்கு 1,435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சில் கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. அனல்காற்று வீசியதுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக பிரான்சில் பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளும் மூடப்பட்டதுடன், பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

வெயில் தாக்கத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனினும் கோடை வெயிலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை என் தெரிவிக்கப்படுகின்றன.