பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வருக்கும் வலுவான பாதுகாப்பு

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வருக்கும் வலுவான பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிற்கும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வருக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குறித்த வேட்பாளர்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவ்வாறு பாதுகாப்பிற்காக உரிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திசாநாயக்க, மஹேஷ் சேனாநாயக ஆகியோருக்கு இவ்வாறு விசேட பாதுக்காப்பு வழங்க உள்ளதாக புலனாய்வு பிரிவினால் பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த வேட்பாளர்களுக்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் ஆகியோரை புதிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துமாறு அண்மையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.