தேர்தல் சந்தையில் விலைபோகும் பச்சோந்திகள்  –  MP’க்கு 05 கோடி, PS என்றால் 05 இலட்சம்

தேர்தல் சந்தையில் விலைபோகும் பச்சோந்திகள் – MP’க்கு 05 கோடி, PS என்றால் 05 இலட்சம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாசவுக்கு ஆதரவு வழங்குகின்ற சிலர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரச்சார மேடையில் ஒன்றிணைய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி பகுதியில் நேற்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. அமைச்சர் மலிக் சமரவிக்ரம மத்திய வங்கியில் உள்ள பணத்தினை பெற்று எமது கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் அழைப்பு விடுக்கிறார்.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் தற்பொழுது வெளியில் வந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியில் உள்ள உறுப்பினர்களின் பின்னால் மலிக் சமரவிக்ரம சென்று இவ்வளவு தொகை பணம் தருகிறேன் எமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறார்.

இதற்கு முன்பு கூட குருணாகலை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஐம்பது மில்லியன் ரூபாய் பணம் வழங்கி தமது பக்கம் வருமாறு கோரியிருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் தற்பொழுது பாரிய அளவில் செலவு செய்யப்படுகிறது…” எனத் தெரிவித்திருந்தார்.