சீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்தவும் – டிரம்ப்

சீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்தவும் – டிரம்ப்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் எதிர்த்தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்து மோதிக்கொண்டன.

அதே நேரத்தில் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகின்றன. முன்னதாக ஒருமுறை, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் சீனா வர்த்தகப்போரில் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனாலும் முற்றிலும் வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வரும் சுமூகமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், சீனாவிற்கு கடன் வழங்குவதை உலக வங்கி நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

‘உலக வங்கி சீனாவிற்கு ஏன் கடன் வழங்க வேண்டும்? அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும்? கடன் வழங்குவதை நிறுத்துங்கள்’ என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.