பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவி நெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான சுமார் 36 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக ஆகியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்குடன் தொடர்புடைய சில சாட்சியாளர்களின் சாட்சியங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் அவற்றின் பிரதிகள் தமக்கு தேவைப்படுவதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதியின் கோரிக்கைகளுக்கு அமைவாக அவற்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.